🚌 எரிபொருள் விலை உயர்வு: பேருந்துக் கட்டணம் 20% வரை அதிகரிக்கலாம்!
எரிபொருள் விலை உயர்வால் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்கள் சந்தித்து வரும் நட்டநிலையை குறைக்கும் நோக்கில் பயணத் தடவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கத் தவறினால், அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வருடாந்த கட்டணத் திருத்தத்தின் போது பேருந்துக் கட்டணங்கள் சுமார் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இதன்படி குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 35 ரூபாயைத் தாண்டும் வாய்ப்பும் காணப்படுகின்றது.
---
🎓 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் திகதி
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறவுள்ளது.
முதலாம் பகுதி வினாத்தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
---
👨👩👧👦 பெற்றோரை கைவிட்டால் சொத்து பறிமுதல்? புதிய சட்டம் குறித்து ஆலோசனை
வயோதிப பெற்றோரை பராமரிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை கொண்டுவர அரசாங்கம் ஆரம்பக்கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ சூரியன் தெரிவித்துள்ளார்.
இதன்படி பெற்றோரிடமிருந்து நன்கொடைப் பத்திரம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களைப் பெற்ற பின்னர் அவர்களை பராமரிக்கத் தவறினால், அந்த சொத்துக்கள் மீளப் பெற்றோருக்கே வழங்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சில விசேட சந்தர்ப்பங்களில், அத்தகைய சொத்துக்களை அரசுடைமையாக்கி அதன் வருமானத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் திட்டமும் ஆராயப்பட்டு வருகிறது.
அதேநேரம், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் முதியோர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அரசாங்கமே வழங்கும் புதிய சமூக பாதுகாப்புத் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முறைப்பாடுகளை எளிதில் பதிவு செய்யும் வகையில், சமூக சேவை அதிகாரிகள் மற்றும் விசேட உதவி இலக்கங்கள் ஊடாக புதிய முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களுடன் நாங்கள என்றும்
