NERVIZHI NEWS - DO NOT COPY
Nervizhi News Network
காத்திருக்கவும்...
நேரலை (LIVE)
Translate / மொழிமாற்றம் / පරිවර්තනය
முக்கிய செய்திகள்
+++ இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய நேரடித் தொகுப்புச் செய்திகள் உடனுக்குடன்.. +++
நெர்விழி நியூஸ் - எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள்

தெல்தெனியவில் கொடூரம்: 22 வயது யுவதி அடித்துக் கொலை; தோட்டத்தில் புதைத்த காதலன் கைது!

 

நெர்விலி செய்திப் பிரிவு:

மத்திய மாகாணத்தின் தெல்தெனிய, ரங்கல பகுதியில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போனதாக நாடகம்:

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த வாசனா சந்தமாலி வீரசேகர (வயது 22) என்ற இளம் பெண் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்தார். இது குறித்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்த நபர் ரங்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். எனினும், முறைப்பாடு செய்த நபரின் முன்னுக்குப் பின் முரணான நடத்தைகள் பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின.

தாயாரிடம் அம்பலமான உண்மை:

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரின் தாயாரை பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அந்த விசாரணையின் போதே கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. குடும்பத் தகராறு காரணமாக அந்த இளம் பெண்ணைத் தாக்கி கொலை செய்துள்ளதாகவும், பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் குழிதோண்டி புதைத்ததாகவும் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தோண்டி எடுக்கப்பட்ட சடலம்:

தாயாரின் வாக்குமூலத்தை அடுத்து, ரங்கல பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, குறிப்பிட்ட பகுதியில் தோண்டுதல் பணிகளை மேற்கொண்டனர். இதன்போது சுமார் 3 அடி ஆழமான குழியிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்டெடுக்கப்பட்டது. சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விஷம் குடித்து பதுங்கியிருந்த கொலையாளி:

கொலைச் சம்பவத்தின் பின்னர் தப்பியோடியிருந்த சந்தேகநபர், நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் தனது வீட்டிற்கு வந்து தோட்டத்தில் பதுங்கியிருந்த போது பொலிஸாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து ஒருவித விசித்திரமான நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், அவரை உடனடியாக பலத்த பாதுகாப்புடன் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

4 வருட காதல் வாழ்க்கை:

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், தனது மனைவியைப் பிரிந்து கடந்த நான்கு வருடங்களாக இந்த இளம் பெண்ணுடன் ரங்கல பகுதியில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ரங்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பார்வையாளர்கள்: ...
PK.JUTHAN
News 🗞️ reporter PK .JUTHAN
Sri Lanka, Batticaloa, Kokkadichcholai