கல்முனை, ஜூன் 5
கல்முனை வட்ட விதானை வீதியில் அதிகாலை நேரத்தில் இடம்பெற்ற தாலிக்கொடி பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் திகதி அதிகாலை சுமார் 6.00 மணியளவில், வீட்டின் முன்பகுதியில் வாசலை பெருக்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார்.
கிடைத்த தகவல்களின் படி, வீட்டின் மதிலை தாண்டி உள்ளே குதித்த சந்தேகநபர், பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கணநேரத்தில் அறுத்து எடுத்துக்கொண்டு மீண்டும் மதிலின் வழியாக தப்பிச் சென்றுள்ளார்.
திடீர் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் சத்தமிட்டு உதவி கோரியதையடுத்து வீட்டார் வெளியே வந்தனர். எனினும் அதற்குள் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அருகிலிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் முகம் தெளிவாக பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, குறித்த காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்னரும் கடந்த மாதம் இதே பகுதியில் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்து மாலையும் இதேபோன்ற முறையில் பறிக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அதிகாலை நேரங்களில் பெண்களை குறிவைத்து நடைபெறும் நகைப் பறிப்பு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
பொலிஸார் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும், அதிகாலை வேளைகளில் தனியாக வெளியில் செல்லும்போது நகைகளை அணிவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
— Nervizhi News Network 24
