NERVIZHI NEWS - DO NOT COPY
Nervizhi News Network
காத்திருக்கவும்...
நேரலை (LIVE)
Translate / மொழிமாற்றம் / පරිවර්තනය
முக்கிய செய்திகள்
+++ இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய நேரடித் தொகுப்புச் செய்திகள் உடனுக்குடன்.. +++
நெர்விழி நியூஸ் - எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள்

கண்ணீரில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள்: வறட்சியின் தாக்கமும், இடைத்தரகர்களின் சுரண்டலும் உச்சத்தில்!


 மட்டக்களப்பு | சிறப்பு செய்தி

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தற்போது பெரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். பல மாதங்களாக வெயில், மழை, சேறு, சகதி என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உழைத்து வளர்த்த நெற்பயிர்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறுவடை செய்யத் தயாராகியுள்ள நிலையில், தங்களின் உழைப்புக்கான நியாயமான விலையைப் பெற முடியுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைச்சல்

இந்த பருவத்தில் போதிய மழை பெய்யாததால் மாவட்டத்தின் பல நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்கள் முற்றாக வற்றிப்போயுள்ளன. இதன் காரணமாக வயல்களுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல், ஏக்கர் கணக்கான நெற்பயிர்கள் கருகி அழிந்துள்ளன.

வறட்சியின் தாக்கத்திலிருந்து தப்பி எஞ்சியுள்ள குறைந்தளவான விளைச்சலையே விவசாயிகள் தற்போது அறுவடை செய்யத் தயாராகி வருகின்றனர்.

அதிகரித்துள்ள உற்பத்திச் செலவுகள்

விவசாயிகளின் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில், விவசாய உற்பத்திக்குத் தேவையான அனைத்து பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.

ஒரு மூடை உரத்தின் விலை ரூ.16,000 முதல் ரூ.18,000 வரை உயர்வு

பூச்சிக்கொல்லி மற்றும் நஞ்சு எண்ணெய்களின் விலை ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை

ஒரு ஏக்கர் நிலக் குத்தகை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை

ஒரு ஏக்கர் நிலத்தை உழுவதற்கான செலவு ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை

இவ்வாறான அதிக செலவுகளுக்கு மத்தியில் விவசாயிகள் பெரும் கடன்சுமையுடன் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இடைத்தரகர்களின் விலைச் சுரண்டல்

அரசாங்கம் ஒரு மூடை நெல்லுக்கான விலையை ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை நிர்ணயித்துள்ள போதிலும், களத்தில் நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அறுவடை நெருங்கியுள்ள நிலையில், இடைத்தரகர்கள் ஒரு மூடை நெல்லை ரூ.4,800 முதல் ரூ.5,000 வரையிலான குறைந்த விலைக்கு வாங்க முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஒன்றிணையுமாறு விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு விவசாய அமைப்புகள், சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

அறுவடை தொடங்குவதற்கு முன்பாகவே நியாயமான கொள்வனவு விலையை உறுதி செய்யவும், இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளன.

"உழைப்புக்கு நியாயமான விலை வேண்டும்"

இயற்கை பேரிடர்களாலும், அதிகரித்துள்ள உற்பத்திச் செலவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய அவசரத் தேவையாகும்.

அறுவடை தொடங்கும் முன்பே அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தலையீடு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பார்வையாளர்கள்: ...
PK.JUTHAN
News 🗞️ reporter PK .JUTHAN
Sri Lanka, Batticaloa, Kokkadichcholai