சட்டவிரோத சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளை ஒடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பாடு
கொழும்பு | ஜூன் 05
இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை, இரு நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கிடையிலான நடைமுறை ஒத்துழைப்பும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளின் போது பல சட்டவிரோத இணைய சூதாட்ட மற்றும் மோசடி மையங்கள் கண்டறியப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் பெருமளவிலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதுடன், மோசடி நடவடிக்கைகளில் தொடர்புடைய சில சீனப் பிரஜைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சீன அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாகவும், சீனப் பிரஜைகள் வெளிநாடுகளில் சூதாட்ட நிலையங்களை நடத்துவதோ அல்லது அதில் பங்கேற்பதோ சட்டவிரோதமானது எனவும் சீன தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் பணமோசடி, மனிதக் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற பாரிய குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளை முறியடித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களின் நிதி மற்றும் நிறுவன கட்டமைப்புகளை சீர்குலைப்பதன் மூலம் இரு நாடுகளின் மக்களின் உயிர், சொத்து மற்றும் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்க முடியும் என சீன தூதரகம் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது.
– Nervizhi News Network 24
